குமரி (கற்றாழை) Aloe Vera
- Pragnya Life
- Sep 30, 2020
- 2 min read
Updated: Oct 1, 2020
“வற்றாக் குமரிதன்னை வற்றலென ஒண்ணினுகஞ் சீர் முற்றாக் குமரியெனமூளுமே - நற்றாக்குந் திண்மையு மல்லாத் தெரிவையமே யானாது முன்மை மிகுநூறா மாயுள்”. (தேரையர் வெண்பா)
“பொல்லாமே கங்கபம்பு முச்சூலை குஷ்டரசம்
அல்லார்மத் தம்பகந்த ரஸ்குன்மம் - எல்லாம் விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சரமு
மா குமரிக்கு மருண்டு"

பொருள் - மேகம் , கபம் , புழு , சூலை, குஷ்டம்,மூலம்,பெண்குறிநோய், குன்மம்,அரிப்பு,எரிச்சல்,கிரிச்சரம் போகும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த கோளாறுகளை நீக்குவதினாலும், இந்தியாவின் தென்கடலோரத்தில் கன்னியாகுமரியில் தன்னிச்சையாக அதிகம் வளரும் செடி என்பதினால் இதட்கு கன்னி, குமரி என்ற பெயர்கள் வழங்கப்படுகிறது.
கற்றாழையின் இலைக் கதுப்பு (ஜெல்) மற்றும் வேர், சருகுமருத்துவப் பயன்களைக் கொண்டவை.
கற்றாழையில் 17 வகை உண்டு (சாம்பசிவம் அகராதி)
கருங்கற்றாழை
நார்க்கற்றாழை
இலைக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை
காட்டுக்கற்றாழை
செங்கற்றாழை
எருமைக்கற்றாழை
மலைக்கற்றாழை
ஆனைக்கற்றாழை
வெண்கற்றாழை
பேய்க்கற்றாழை
மருள்க்கற்றாழை
வரிக்கற்றாழை
துலுக்குக்கற்றாழை
சிறுகற்றாழை
சீமைக்கற்றாழை
சிவப்புவரிக்கற்றாழை

கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் மிகச் சாதாரணமாகக் கிடைக்கிறது. எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை.
இதனை உட்பிரயோகமாகவும் வெளிபிரயோகமாகவும் பயன்படுத்தலாம் . வெளிப்பிரயோகமாக கூந்தல் வளர்ச்சி ,சரும பாதுகாப்பு, கண் சிவப்பு,மூலக்கடுப்பு,வெட்டு காயங்கள் போன்றவற்றிலும் உட்பிரயோகமாக உடல் சூட்டை தணிக்க, குடல்புண் ,மலச்சிக்கல் ,நீரிழிவு,மூலம்,வெள்ளைபடுதல்,மாதவிடைக்கோளாறுகள் , புற்றுநோய்கள் போன்ற பல்வேறுபட்ட நோய்நிலைமைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கற்றாழையை சித்தர்கள் ஒரு காயகற்ப மூலிகையாக கூறுகிறார்கள் .
கற்றாழையை பயன்படுத்த முன்னர் அதனை சுத்தப்படுத்தும் முறை
நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அதிகம் சத்துகளும் பொதிந்திருக்கும்.
கற்றாழைச் செடியின் நன்கு முதிர்ச்சி அடைந்த ஓர் மடலை வெட்டி அதிலுள்ள மஞ்சள் நிற திரவத்தை முழுமையாக வடிக்க வேண்டும்.
பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும்.
ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சலை உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.
சுவையான குளிர்ச்சிதரும் கற்றாழை பானம் வீட்டில் செய்யும் முறை
நன்கு சுத்தம் செய்த கற்றாழை - 1 பங்கு
தயிர் - 1/2 பங்கு
சீனி - 1/2 பங்கு
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
முதலில் மேற்கூறிய முறைப்படி சுத்தம் செய்து எடுக்கப்பட்ட கற்றாழை 1 பங்கைசிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை grinder இல்அரைத்து எடுத்தல். அரைத்து எடுத்த கற்றாழை சாறின் 1/2 பங்கிட்கு தயிர் எடுத்து அதனுடன் கலத்தல். மேலும் சீனி 1/2 பங்கும் ( நீரிழிவு நோயாளர்கள் சீனி சேர்க்காமலும் பயன்படுத்தலாம்)எலுமிச்சம் சாறு 1/2 தேக்கரண்டியும் சேர்த்து நன்கு கலந்து பருகலாம் . மேலும் இதனை குளிரூட்டியில் 1 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Comments